மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வி திட்டம் என்றால் மாநில அரசின் கைவினைத் திட்டம் குலத்தை வலுப்படுத்தும் திட்டமா ? தந்தையின் பெயரை சூட்டுவதற்காகவே திட்டங்களை உருவாக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. நகை செய்தல், சிகையலங்காரம், காலணிகள் தயாரித்தல், சுடுமண் வேலைகள் உள்ளிட்ட வேலைகளுக்கு பயிற்சி, பிணையற்ற கடன் உதவி, வட்டி மானியம் வழங்கும் வகையில் “கலைஞர் கைவினைத் திட்டத்தை” தமிழக அரசு உருவாக்கியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்ட விஸ்வகர்மா திட்டம் சாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் எனக்கூறி அதனை செயல்படுத்த முடியாது என அறிவித்த முதல்வர், தற்போது அதே சிறப்பம்சங்களை உள்ளடக்கி கலைஞர் கைவினைத் திட்டத்தை உருவாக்கியிருப்பதன் நோக்கம் என்ன ? கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தும் திட்டங்களை காப்பியடித்து தன் தந்தையின் பெயரில் திட்டங்களை உருவாக்குவது தான் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சமூகநீதியா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர, தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை உருவாக்கக் கூடாது என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால் கைது செய்வதா ? – பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மீது திமுக அரசு ஏவியிருக்கும் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பணிநிரந்தரம் கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான பகுதிநேர ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது வாக்குறுதியளித்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்பும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம். பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளோடு நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே தற்போது ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று திரண்டு போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை அயனாவரத்தில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி – குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கு மேலாக பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிப்புக்குள்ளான மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கொடூரக் கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்திருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரை ஒரு வருடத்திற்கும் மேலாக அடையாளம் தெரியாத கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாகி வருவதையே வெளிப்படுத்துகிறது. எனவே, மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, இனியாவது காவல்துறை விழிப்புடன் செயல்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்களை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கரூர் அருகே மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் – பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தன்னலம் கருதாமல் மக்களை பாதுகாத்திடும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா ? கரூரில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க வந்த அம்மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்கள் மட்டுமல்லாது, கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களிலும் தன்னலம் கருதாமல், நேர காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களாக கூட பார்க்கும் மனநிலை இல்லாத திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்க முன்வராத முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை அவர்களுடன் அமர்ந்து உணவு உண்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்வதாலும், அவ்வப்போது புகழ்ந்து பேசுவதாலும் அவர்களுக்கு எந்தவித பயனுமில்லை. எனவே, தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு இனிவரும் காலங்களில் உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் என் லட்சியம்; தமிழக மக்களின் வளர்ச்சியும் வளமான வாழ்வுமே என்னுடைய இலக்கு எனக்கூறி தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று. தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயமாக திகழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் ஒருசேர வீழ்த்தி வெற்றி முத்திரையை பதித்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

திருவண்ணாமலை அருகே திறக்கப்பட்ட 90 நாட்களில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்ட பாலம் – தரமற்ற பாலங்களை கட்டி பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிபட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் தொண்டமானூர், கிருஷ்ணாபுரம், பெருந்துறைப்பட்டு, எடத்தனூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு அத்தியாவசியத் தேவைகளுக்காக சுமார் 15கி.மீ சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 15.90 கோடி ரூபாயில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உயர்மட்ட பாலம் 90 நாட்களுக்குள்ளாக வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மொத்த பாலங்களின் தரத்தையும், உறுதித் தன்மையையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது வெள்ளத்தில் உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டிருப்பது அந்த புகார்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தரமற்ற முறையில் பாலத்தை கட்டி பொதுமக்களின் உயிர்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு , இனிவரும் காலங்களில் கட்டப்படும் பாலங்களின் உறுதித்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தும் பாதிப்பிலிருந்து மீள முடியாத பொதுமக்கள் – உணவுக்காக மக்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை ஏற்படுத்திய திமுக அரசின் அக்கறையின்மை கடும் கண்டனத்திற்குரியது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து மூன்று தினங்கள் ஆன பின்பும் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மக்கள் தவித்து வருவதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. குடியிருப்புகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்த நிலையில் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, தங்குவதற்கு இடமின்றி தவித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்துத் தராமல் அவர்களை வீதிக்கு வந்து போராடும் அளவிற்கான சூழலை உருவாக்கிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. அதிலும், எந்தவித முன்னறிவிப்புமின்றி சாத்தனூர் அணையிலிருந்து பெருமளவு நீரை திறந்துவிட்டதே, விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்க முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பார்வையிட வந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் பிரதான சாலைகளை மட்டுமே பார்வையிட்டுச் சென்றதாக கூறப்படும் நிலையில், உணவுக்காக கையேந்த வைத்த திமுக அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேற்றை வீசும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதோடு, இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிடுமாறும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

மக்கள் விரோத திமுகவை ஆட்சியிலிருந்து அடியோடு அகற்றிடுவோம் ! துரோகக் குணம் கொண்ட சுயநலக் கூட்டத்திற்கு தகுந்த பாடம் புகட்டிடுவோம் ! இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் சபதமேற்றிடுவோம் !! டிசம்பர் 5ஆம் தேதி இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் நாம் அனைவரும் ஒன்று கூடி உறுதியேற்றிடுவோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு இரும்புப் பெண்மணியாக செயல்பட்ட நம் இதயதெய்வம் அம்மா அவர்களின் வழித்தடத்தை பின்பற்றி அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் நம் கழகத்தின் வெற்றி முத்திரையை பதித்திடுவோம்!

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.