புதிய பால் அறிமுகம் என்ற பெயரில் அளவை குறைத்து விலையை உயர்த்தி நூதன மோசடியில் ஈடுபடுவதா ? – சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி பொதுமக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும்.ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் பெயரில் “பிளஸ்” எனும் பெயரை சேர்த்து லிட்டருக்கு 11 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.500 மி.லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் அளவை 450 மி.லிட்டராக குறைத்திருப்பதோடு, சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதன் விலையையும் லிட்டருக்கு 44 ரூபாயிலிருந்து 55 ரூபாயாக உயர்த்தியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனை கூட செய்ய முன்வராத திமுக அரசு, ஆண்டுக்கு இருமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி வரும் நிலையில், அன்றாட அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான பாலின் விலையை கூட பலமுறை உயர்த்தி அதன் மூலம் வருவாய் ஈட்டுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.எனவே, ஏழை, எளிய பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அரசு உதவி வழக்கறிஞர் தேர்வில் குளறுபடியா ? – தேர்வர்களின் அரசுப் பணி கனவை சிதைக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களுக்கான தேர்வில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு உதவி வழக்கறிஞர் தேர்வுக்கு முறைப்படி விண்ணப்பித்த பல தேர்வர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகவும், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வர்கள் தேர்வெழுத முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் இயங்கி வந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், தற்போது தலைவர் நியமிக்கப்பட்ட பின்னரும் அதே குளறுபடிகள் தொடர்வது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, குளறுபடிகள் நிறைந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை ரத்து செய்துவிட்டு, முறையான அறிவிப்பை வெளியிட்டு மறு தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தையும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது தமிழக மீனவர்கள் மீதான அந்நாட்டு கடற்படையின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் . இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு அனுர குமார திசநாயக அவர்கள் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியாவிற்கு வர இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபரின் இந்திய வருகையை பயன்படுத்தி நீண்ட நாட்களாக நீடித்துவரும் இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கும், அட்டூழியத்திற்கும் முடிவுகட்டி தங்களின் மீன்பிடித் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடற்படையின் அராஜகப்போக்கிற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, இதுவரை அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவுத்துறையையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்த திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடரும் கனமழை – முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, என பல மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீண்டு வராத நிலையில், கனமழை நீடிக்கும் என்ற தற்போதைய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.மேலும், எந்தவித முன்னறிவிப்பின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வடமாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை சூழ்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததை விட அதிகளவிலான மழைப்பொழிவு என காரணத்தை தேடாமல், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே கனமழை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க ஒரே வழியாக அமையும்.எனவே, ஆற்றங்கரையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, முறையான எச்சரிக்கைக்கு பின்னரே அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தமிழக முதல்வரின் கேரளப் பயணம் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் – முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவுடனே முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் திரும்பிட வேண்டும். வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கேரள மாநிலம் கோட்டயத்தில் பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை நேரில் திறந்து வைக்க தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கேரள மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். முல்லைப்பெரியாறு அணையில் ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதோடு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கார் பார்க்கிங் அமைக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வரும் கேரள அரசின் பிடிவாதப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் போதுமான நீரின்றி கருகிய நிலையிலும், கடந்த ஆண்டு பெங்களூரு சென்று கூட்டணிக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அம்மாநில முதலமைச்சரை காவிரிநீரை திறந்துவிட வலியுறுத்தாமல் திரும்பியது போல் இல்லாமல், இம்முறை கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்களை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கேரள மாநிலத்திற்கான பயணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயனுள்ளதாக அமைய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சுயநலத்திற்காகவும், கூட்டணி தர்மத்திற்காகவும் மாநில உரிமைகளையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் மீண்டும் ஒருமுறை அடகு வைக்காமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நல்ல முடிவோடு தமிழகம் திரும்ப வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.