தலைமைக் கழக அறிவிப்பு: கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்தியம், விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 25.01.2025, சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் விருதுநகர் மாவட்டம் பாரதி நகரில் அமைந்துள்ள சோலை ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விருதுநகர் மத்தியம், விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு ஆகிய கழக மாவட்டங்களைச் சார்ந்த அனைத்து நிலையிலான கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும் அகவிலைப்படி உயர்வு – பணிக்கான பணப்பலன்களைக் கூட வழங்க மறுக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட எந்தவித பணப்பலன்களும் தற்போதுவரை வழங்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு பல ஆண்டுகளாக முறையாக வழங்கப்படாத நிலையில், அது தொடர்பான வழக்கில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து திமுக அரசு காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைக் கூட வழங்காமல் “அரசுக்கு கருணை இருக்கிறது ஆனால் நிதி இல்லை” என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. அரசின் மற்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்கிவரும் திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்களை மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதால் சுமார் 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பணப்பலன்களைப் பெறாமலேயே உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இனியும் மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தாமல், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவதா ? – அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை அச்சிடும் பணியில் 30 சதவிகிதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் விளங்கி வரும் நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்துவிட்டு, அண்டை மாநிலத்திற்கு அப்பணியை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இம்முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிடும் அளவிற்கான அச்சகங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன்? என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, அச்சுத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கே முழு பணியையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

தலைமைக் கழக அறிவிப்பு: தாய்மொழி தமிழுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் மொழி ஆதிக்கத்தை தீரத்துடன் எதிர்த்து தன்னுயிர் நீத்த தியாகத் தீபங்களான மொழிப்போர் தியாகிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்திடுவோம். தமிழகத்திலுள்ள அனைத்து கழக மாவட்டங்களிலும் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திடுவதோடு, அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர்களுடன், மாணவர் மற்றும் மாணவியர்அணி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை தாம்பரம் – முடிச்சூர் சாலையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர், தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அப்பகுதியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலரின் செயினை பறித்துவிட்டு தப்பியோடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில் அதே கொள்ளையர்கள் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கியுள்ளதா ? அல்லது முடக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உலகிலேயே தொண்டர்களின் விருப்பத்திற்காகவும், ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஒரு இயக்கத்தை தொடங்கி, தான் உயிரோடு இருக்கும் வரை அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தில் அமர வைத்திருந்த புரட்சித் தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினம் இன்று… தர்மத்தாயின் தலை மகனாக, தமிழ்நாட்டின் ஒளி விளக்காக, பாமர மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, நாடி வருவோரின் வறுமையை போக்கும் வள்ளலாக திகழ்ந்த மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.