திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. செய்யாறு நகரில் ஏற்கனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. நெல், கரும்பு, கேழ்வரகு, மற்றும் காய்கறிகள் என பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், எவ்வித கருத்தையும் கேட்காமல் நிலம் கையகப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து அம்மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் நிலவுரிமையை மீட்க கடந்த 125 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிவரும் விவசாயிகளை சமூகவிரோதிகள் போல சித்தரித்து அவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருப்பதோடு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது எனவே, நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற்று, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க முடிவை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

உலகமெங்கும் எந்த சூழலிலும் பாகுபாடின்றி செய்திகளையும், புகைப்படங்களையும் சேகரித்து நாட்டுமக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் எனது தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, புயல், வெள்ளம், வெயில், போர் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பற்ற சூழலிலும் மக்களுக்காக களத்தில் நிற்பவர்களை கொண்டாடும் நாளாக மட்டுமல்லாமல் பத்திரிகை சுதந்திரத்தையும், சமூகத்தின் மீதான பத்திரிகைகளின் பொறுப்புக்களையும் உணர்த்தக் கூடிய நாளாகவும் இந்நாள் அமையட்டும். #NationalPressDay

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொள்வது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. சுரங்கம், அணுமின் திட்டங்கள், எண்ணெய் எரிவாயு ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கி வரும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முல்லைப் பெரியாறின் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி மற்றும் நீர் கசியும் அளவை பார்வையிட்டு ஆய்வு செய்து வருவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, பருவகால மாறுபாடுகளின் போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் நிலவரம் மற்றும் உறுதித்தன்மையை மத்திய கண்காணிப்புக்குழு அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்து வந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்குவதோடு, ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.