July 1, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக திரு.T.மதிவாணன் அவர்கள் நியமனம்.
July 1, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்: ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகின்ற 05.07.2025, சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில், ஈரோடு மாவட்டம், பவானி காடையாம்பட்டியில் அமைந்துள்ள கொங்கு மஹாலில் நடைபெறவுள்ளது.
July 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் 7 பேர் பலி – பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனிக்குழுவை ஏற்படுத்தி விபத்துக்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தனியார் தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிப்பதற்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுமே அடுத்தடுத்த விபத்துகளுக்கும் அப்பாவி தொழிலாளர்களின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய மாவட்ட நிர்வாகமும், திமுக அரசும் அதற்கான எந்தவித முயற்சியையும் முன்னெடுக்காததன் விளைவு தற்போது 7 அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பறிபோயிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடராத வகையில் தனி கண்காணிப்புக்குழுவை உருவாக்கி பட்டாசு ஆலைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொள்வதோடு, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லை தாண்டியதாகக் கூறி கடந்த இரு தினங்களில் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது – இலங்கை கடற்படையினரின் தொடர் அராஜகத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதே ஒரே தீர்வு . ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை மன்னார் வடக்கு கடற்பரப்பு அருகே எல்லை தாண்டியதாக கூறி கைது செய்த இலங்கை கடற்படை அவர்களின் படகையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று முன் தினம் இதே ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 7 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் ஒருபுறம் இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாவதும், மறுபுறம் கடற்படையினரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் ஒவ்வொரு கைது சம்பவத்தின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டதோடு தன் கடமை நிறைவடைந்து விட்டதாக கருதும் தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற மனநிலைக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இனியும் இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடராத வகையில் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கும், அராஜகத்திற்கும் நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
July 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
July 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணிக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.நோயாளிகளின் நல்வாழ்வுக்காக நேரம், காலம் பார்க்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம், மருத்துவமனைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நடப்பாண்டிலாவது நிறைவேற்றித் தந்திட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
June 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பின் மூலம் ஏறக்குறைய ரூ.200 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் – விதிகளை மீறிய அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரிக்குறைப்பு முறைகேட்டின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மதுரை மாநகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் லட்சக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக வரிக்குறைப்பு செய்ததில் மாநகராட்சி உயர் அதிகாரிகள், மண்டலத்தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.நீதிமன்றம் மூலமாகவோ, மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமாகவோ குறைக்கப்படும் வரியை, தன்னிச்சையாக குறைத்திருப்பதோடு, வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகளின் கடவுச் சொற்களும் (Password) முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அனைத்து வரிவிதிப்புகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெற்று வரும் நிலையில், தற்போது ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெற்றிருக்கும் இந்த வரிக்குறைப்பு முறைகேடு திமுகவின் அடிப்படை குணமான விஞ்ஞான ஊழலை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, மதுரை மாநகராட்சியில் வரிக்குறைப்பு முறைகேடு புகாரில் கைதாகியுள்ள நபர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, மற்ற மாநகராட்சிகளும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
June 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணம் – திரைப்படங்களை பார்த்து கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர் தன் ஆட்சியில் தொடரும் காவல் மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்திருப்பதாக நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி, அவர்களின் புகார்களுக்கு தீர்வு காண வேண்டிய காவல்துறை, விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டு மிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வதே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணம் என்ற புகார் எழுந்துள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடர்பான திரைப்படங்களை பார்த்து போலிக் கண்ணீர் வடிக்கும் முதலமைச்சர், தன் ஆட்சியில் சாமானிய மக்களின் மீது காவல்துறையின் மூலம் மனிதாபிமானமற்ற முறையில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் ?ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் காவல்துறையினருக்கு இல்லை என்றாலும், காவலர்கள் பற்றாக்குறை, அளவுக்கு அதிகமான பணிச்சுமை, தீராத மன அழுத்தம் ஆகியவை காவலர்களுக்கு உட்பட்ட அதிகாரத்தை மீறுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, காவல்நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும் என மேடையில் பேசுவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதாமல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
June 28, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு உணவு உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.நாடு முழுவதும் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவிற்கு ஏற்ப வரி விதிக்கும் முறையை செயல்படுத்த இருப்பதாக வெளியாகியிருக்கும் மத்திய நீர்வளத்துறையின் அறிவிப்புக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். திமுக அரசின் கூட்டணி தர்மத்தால் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாத நிலையில், மாநிலத்தின் பெரும்பங்கு வேளாண்மைக்கு முதன்மை நீராக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கும் வரி விதிக்கும் மத்திய நீர்வளத்துறையின் முடிவு தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.நிலத்தடி நீரின் அருமையையும், அவசியத்தையும் மாநிலத்தின் ஒவ்வொரு விவசாயியும் நன்றாக அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தி வரும் நிலையில், நிலத்தடி நீர் வீணடிக்கப்படுவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தடுக்கவே வரி விதிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை கூறியிருக்கும் விளக்கம் ஏற்புடையதல்ல. ஏற்கனவே, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து இன்னல்களை சமாளிக்க முடியாமல் தமிழக விவசாயிகள் தவித்து வரும் நிலையில், தற்போது நிலத்தடி நீருக்கும் வரி என்பது அவர்களை விவசாயத்தை விட்டே வெளியேற்றக் கூடிய ஆபத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, எத்தகைய இடையூறுகள் வந்தாலும் உணவு உற்பத்தி எனும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய நீர்வளத்துறையை வலியுறுத்துகிறேன்.
June 28, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு.மகாலிங்கம் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.மகாலிங்கம் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.