அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மற்றும் உரிமையாளர் மீது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறை மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவருவதன் ஒரு பகுதியாக, தினமலர் நாளிதழ் உரிமையாளர் மற்றும் ஆசிரியர் மீது மதுரை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகைகள் மீது வழக்கு தொடர்வதாலும், சட்டரீதியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாலும், தான் செய்த தவறுகள் நியாயமாகிவிடாது என்பதை அரசு நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரமே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதை உணர்ந்து, தினமலர் மீதான வழக்குகளை ரத்து செய்வதோடு, பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டில் வலுவான ஜனநாயகம் தழைத்தோங்க தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட இந்திய அரசியமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த இந்நாளில் நாட்டுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்கொண்டு சுதந்திரத்தை அடைய பாடுபட்ட தியாகிகளையும், தேசத் தலைவர்களையும் நினைவு கொள்வதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக கடைபிடித்து நாட்டின் வளர்ச்சிக்காக தனது பங்களிப்பை அளிக்க ஒவ்வொரு குடிமகனும் உறுதியேற்போம்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் திரு.நேசபிரபு அவர்களை நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே திரு.நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாக பலமுறை புகார் அளித்த பின்னரும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெட்ரோல் பங்கில் வைத்து நேசபிரபு மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திமுக ஆட்சிக்குவந்த பின் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளை போன்ற சட்டம், ஒழுங்கு பிரச்னைகளால், பொதுமக்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பில்லாத சூழலில் பணியாற்றி வருவதற்கு தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவம் கூடுதல் சாட்சியாக அமைந்திருக்கிறது. எனவே, உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனிமேலாவது சட்டம், ஒழுங்கு பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்தி, இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு.நேசபிரபு அவர்களுக்கு அரசு சார்பில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர் திரு.சுரேஷ் அவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழப்பில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50க்கும் அதிகமான பணியாளர்கள் கழிவுநீர் அகற்றும் பணியின் போது உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும், இயந்திரங்களை கொண்டே கழிவுநீர் அகற்றப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பதை அடிக்கடி நிகழும் மரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. தொடர்ந்து நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க, அரசின் உத்தரவை மீறி கழிவுநீர் அகற்றும் பணியில் சட்டவிரோதமாக மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு வழங்கப்படும் தண்டனையை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டம் குறித்தும், விஷவாயு மரணங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உயிரிழப்புகளை தடுக்க மாநில அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் புது பாய்ச்சலுடன் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல், தொழில், விவசாயம், கல்வி, விளையாட்டு, மக்கள் சார்ந்த பிரச்னைகள் என அனைத்து விதமான செய்திகளையும் எவ்வித பாரபட்சமுமின்றி நடுநிலையாக ஒளிபரப்பு செய்வதில் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. பேச்சு, கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்தை தொடர்ந்து நிலைநாட்டி, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் செய்திகளை ஒளிபரப்பி வரும் நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சி மென்மேலும் உயர்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.