தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.அதே போல இந்திய மொழிகளில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்திருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும். வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது. மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில் போக்குவரத்துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா? தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது தி.மு.க.வுக்கு நினைவிருக்கிறதா?

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.