அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதா ? – சமூக நீதிக்கு எதிரான திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 4 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க அரசு, ஏற்கனவே அரசுப்பணியாற்றி ஓய்வுபெற்றவர்களையே மீண்டும் அரசுத்துறைகளில் நியமிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆண்டுதோறும் பத்துலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதியளித்த தி.மு.க, ஆட்சிக்கு வந்த பின்பு அதற்கு மாறாக அரசுத்துறைகளில் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, அரசுப்பணி கனவில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களை நியமிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உட்பட அக்கட்சியின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது – திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு தமிழக மக்களே விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள். டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து சென்னையில் போராட முயன்ற தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உட்பட அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மதுபான விற்பனை மற்றும் விநியோகத்தில் நடைபெற்றிருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், அத்தகையை பெரும் ஊழலுக்கு எதிராக போராட முயன்ற பாஜக வின் தலைவர்களை கைது செய்வதும், வீட்டுச் சிறையில் அடைத்து வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களையும் கண்டும் காணாமல் கடந்து செல்லும் காவல்துறை, அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக போராடும் தலைவர்களை கைது செய்திருப்பது திமுக அரசின் கையாலாகாத்தனத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து போராட முயன்று கைது செய்யப்பட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் உட்பட அக்கட்சியினர் அனைவரையும் உடனடியாக விடுவிப்பதோடு, இதுபோன்ற அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும் என தமிழக அரசையும் காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலி – பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தர தவறிய இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப்போக்கே பக்தரின் உயிரிழப்புக்கு காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளுமின்றி பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்த போது, திருப்பதி கோயிலை சுட்டிக்காட்டி அலட்சியமாக பதில் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பக்தர் உயிரிழப்புக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்? எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முறையான திட்டமிடலோடு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

ரயில்வே தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? – தமிழக தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ரயில்வே வாரியத்தின் மூலம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள உதவி ஓட்டுநர் பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 6,315 பேரில் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களில் அமைக்கப்படும் இது போன்ற தேர்வு மையங்களால், தொலைதூர பயணம் மேற்கொள்வது மட்டுமின்றி, உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்தை அடைவதும் மிகுந்த சிரமம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, ரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், ரயில்வே துறையையும் வலியுறுத்துகிறேன்.

திருப்பூர் அருகே தோட்ட இல்லத்தில் வசித்து வந்த வயதான தம்பதியர் படுகொலை – அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை, கொள்ளைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள தோட்ட இல்லத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் மற்றொரு படுகொலைச் சம்பவம் தமிழக காவல்துறையின் தோல்வியையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. திருப்பூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தனியாக வசித்துவரும் முதியவர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதும், அவர்களின் இல்லங்களில் இருக்கும் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதும் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த முதியவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய வேண்டிய காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரோ, தேவையற்ற பிரச்னைகளை கிளப்பி தமிழக மக்களை திசை திருப்புவதிலும் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றுவதிலும், கவனம் செலுத்தி வருவதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, திருப்பூர் வயதான தம்பதியர் கொலைவழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9,492 சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடல் – உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்க முடியாத திமுக அரசு, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுப்பது வெட்கக்கேடானது. இந்திய அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவு மூடப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தேசத்தின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதில் முன்னணி வகிக்கும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்படுவது, அந்தந்த தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது அதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மின்கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பேசுவது வெட்கக் கேடானது. முதலைமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டுப் பயணத்தின் போதும், சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும், அதன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கும் திமுக அரசு, தமிழகத்தில் முதலீடுகள் அதிகளவு ஈர்க்கப்படுவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தொழில் முடக்கத்தை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பதோடு, பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை சிறு குறு நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.