திருவண்ணாமலை அருகே மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் – பள்ளிக் குழந்தைகளை தீப்பந்த வெளிச்சத்தில் படிக்க வைத்திருப்பதுதான் திமுக அரசு தந்த விடியலா ? திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. மத்திய அரசின் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு, அடிப்படை வசதிகளில் ஒன்றான மின்சார இணைப்பைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக மின்சாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மின்சார வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகள் தீப்பந்த வெளிச்சத்தில் கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டிருப்பதோடு, இரவு நேரங்களில் விஷ ஜந்துகளுக்கு பயந்து அச்சத்துடனே உறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதோடு, அப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சார இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TANGEDCO_Offcl

அடிப்படை வசதிகளின்றி அவலநிலையில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளால் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தியதின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் Annual Status Of Education Report எனும் ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் குறித்தும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் குறித்தும் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 30 மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவியர்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட தமிழகத்தின் கல்வித்தரம் அதளபாதாளத்திற்கு சென்றிருப்பது உறுதியாகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை விகிதத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டு கணிசமாக குறைந்திருப்பதோடு, பல பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான குடிநீர், வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அரசுப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் வகுப்பறைகளை சீரமைப்பதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களில் 64 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட பயில முடியாத அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது. எனவே, இனியும் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பி மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@tnschoolsedu

பிறப்பிலேயே தான் ஒரு ஜனநாயகவாதி என பிரகடனப்படுத்தி, இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் வலிமையோடு நிமிர்ந்து நிற்கச் செய்த தேசத்தந்தை, ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்றிய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று. பொதுநலச் சேவைக்காக சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் சுதந்திர போராட்டத்தில் புகுத்தி வெற்றி கண்டதோடு, நாடு லட்சிய பூமியாக மாற வேண்டும் என்ற கொள்கை பிடிப்பு கொண்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தை நினைவில் வைத்து போற்றுவோம்.

திமுக கொடி கட்டிய காரில் வந்து இளம்பெண்ணிடம் ரகளை செய்த மதுபோதைக் கும்பல் – முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் சர்வாதிகாரியாக மாறுவது எப்போது ? சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், அப்பகுதியாக திமுக கொடி பொருத்திய காரில் வந்த மதுபோதை கும்பல் தகராறில் ஈடுபட்டிருப்பதோடு, துரத்திச் சென்று மிரட்டியது போலவும் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் வரை திமுகவினருக்கும், திமுகவின் அனுதாபிகளுக்கும் தொடர்பில்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் திமுகவினர் தொடர்புடைய குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக புகார் எழுந்துள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணித்து பேரிடர் காலங்களில் துல்லியமான தகவலை வழங்கும் NVS-02 செயற்கைக்கோளை GSLV-F15 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். GSLV-F15 மூலம் தனது 100வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர்ந்து விண்வெளி உலகில் இந்தியா புதிய உச்சத்தை தொட வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் – ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும். தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2023 ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், அதன் பின் தற்போது வரை தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை, ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது, அத்தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிக்கு சேர முடியும் என்பதால், அத்தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே, லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை அறிவித்து தேர்வை நடத்துவதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் – அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு தரமான காலை உணவை வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 300க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்த மாநகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் காலை உணவை அம்மா உணவகங்கள் மூலம் தயாரித்து வழங்கினால், மாணவ,மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதோடு, திமுக ஆட்சிக்கு வந்தபின் கவனிப்பின்றி இருக்கும் அம்மா உணவகங்களும் மேம்படுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே, மாநகராட்சி பள்ளிகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தப்புள்ளியை உடனடியாக ரத்து செய்வதோடு, அம்மா உணவகங்களை மேம்படுத்தி அதன் மூலம் பள்ளிக்குழந்தைகளுக்கு தரமான உணவை தயார் செய்து வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமைக்குரிய மருத்துவர் திரு.கே.எம்.செரியன் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இதய அறுவை சிகிச்சை துறையில் வியக்கத்தக்க சாதனைகள் பல புரிந்த மருத்துவர் திரு.கே.எம்.செரியன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக மருத்துவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எல்லை தாண்டியதாக கூறி ஒரே இரவில் தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கும் அராஜகத்திற்கும் முடிவு கட்டுவது எப்போது ? ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாருக்கு இடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 33 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையினர், அவர்களின் மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக மீன்பிடிக்கும் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அத்துமீறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போதும், எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன்னுடைய கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால், நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நாளில் கூட கண்ணீரில் மூழ்கியிருக்கும் சூழல் நிலவுவதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் உட்பட இலங்கை சிறையில் நீண்டகாலமாக வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.