August 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்கள் வலுக்கட்டாயமாகக் கைது – தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து சாலை பராமரிப்பு பணிகளையும் தனியார் மயமாக்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளைத் தனியார் மயமாக்கக் கூடாது, சாலைப் பணியாளர்களில் உயிர்நீத்தோர் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக எடுத்துக் கொண்டு ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடர்ந்து மேல்முறையீடு செய்து தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனில்லாத நிலையில், வேறு வழியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற சாலைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து பத்து நாட்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், மறுபுறம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு பணிகளையும் தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்கு ஆகும். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 12, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து எங்களது முழு ஆதரவைத் தெரிவித்தோம். 12 நாட்களைக் கடந்தும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, மேலும் காலம் தாழ்த்தாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
August 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நிதி நெருக்கடியை காரணம் காட்டி அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்கப்படும் தமிழ் பாடநூல்களை நிறுத்துவதா? – தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்று கடும் கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு வருடந்தோறும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்த தமிழ்ப் பாடநூல்கள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிதி நெருக்கடி எனக் கூறி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த திடீர் முடிவால் டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்காலம் நடைபெற்று வருவதாக மேடைதோறும் பெருமை பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை கூட விலையில்லாமல் வழங்க மறுத்திருப்பது தமிழ் மீதான திமுக அரசின் போலிப்பற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. முதலமைச்சரின் புகழ்பாடவும், அவர் செல்லும் இடங்கள் எல்லாம் விளம்பரம் செய்யவும் பல நூறு கோடி ரூபாயை செலவு செய்யும் போதெல்லாம் ஏற்படாத நிதி நெருக்கடி, அண்டை மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கும் போது மட்டும் ஏற்படுகிறதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்த்தெடுப்பதில் தொய்வை ஏற்படுத்தியிருக்கும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வழக்கம் போல அண்டை மாநில தமிழ்ச் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய தமிழ்ப் பாடநூல்களை தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 11, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த புதல்வரும், மாலைமுரசு நிறுவனருமான திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் பிறந்த தினம் இன்று. தந்தையின் வழித்தடத்தைப் பின்பற்றி தமிழ் மீதும் தமிழக மக்களின் மீது அளப்பரிய அன்பு கொண்டு பத்திரிகை உலகின் ஜாம்பாவானாக திகழ்ந்த திரு.பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆற்றிய அரும்பெரும் பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
August 10, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாக நீடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் – பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
August 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நாகாலாந்து மாநில ஆளுநர் மாண்புமிகு திரு.இல.கணேசன் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
August 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பசுமைப் புரட்சியின் சிற்பி எனப் போற்றப்படக்கூடியவரும், உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்தவருமான வேளாண் விஞ்ஞானி பத்ம ஸ்ரீ திரு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் பிறந்த தினம் இன்று. நாட்டின் முதுகெலும்பான வேளாண் உற்பத்தியிலும், ஆராய்ச்சியிலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்த விஞ்ஞானி திரு.எம்.எஸ் சுவாமிநாதன் அவர்களின் அரும்பெரும் பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.
August 7, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவா ? – சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய்ப் பல்கலைக்கழகமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தை திடீரென குறைக்க முடிவு செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பல்கலைக்கழக அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் உயர்கல்விக்காகவும், எதிர்கால நலனுக்காகவும் நேரம், காலம் பார்க்காமல் பணியாற்றும் பேராசிரியர்களும் அலுவலர்களும் தங்களுக்கான ஊதியத்தையே உரிய நேரத்தில் பெறமுடியாமல் ஒவ்வொரு மாதமும் போராடி வரும் நிலையில், தற்போது அந்த ஊதியத்தையும் குறைக்க முடிவு செய்திருப்பது அவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நூற்றுக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கான பணப்பலன்களையும் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அலுவலர்களுக்கான ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தமிழகத்தில் ஒருபுறம் ஊதிய உயர்வு கேட்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வரும் நிலையில், மறுபுறம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே,சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களுக்கான ஊதியக்குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிடுவதோடு, அப்பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு நிதியை ஒதுக்கி அங்கு நிலவிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சிக்கல்களைக் களையத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
August 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கோவை பெரியகடை வீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் தற்கொலை – தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்? கோவை மாவட்டம் பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நபர் ஒருவர் உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. புகார் அளிக்கக் காவல் நிலையத்திற்கு வந்த நபர், அங்குள்ள காவலர்கள் யாருக்குமே தெரியாமல் முதல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மறைந்து கொண்டதாகவும், யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவல்துறை அளித்திருக்கும் விளக்கம் திரைப்படத்தில் வரும் கதைகளுக்கே சவால்விடும் வகையில் அமைந்திருக்கிறது. காவல்நிலையங்களை நாடிவரும் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துவதும், விசாரணை எனும் பெயரில் அப்பாவிகளை அடித்துத் துன்புறுத்துவது போன்ற செயல்பாடுகளால் காவல்துறை தன் மீதான நற்பெயரை படிப்படியாக இழந்து வரும் நிலையில், தற்போது அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையின் மீதான நம்பிக்கையையும் இழக்கச் செய்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் காவல்நிலையத்தில் வந்து தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? காவல் உதவி ஆய்வாளர் அறையில் தற்கொலை நடைபெறும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுவதோடு, காவல்நிலையம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, காவல்நிலையத்தில் நடைபெற்ற தற்கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதோடு, தற்கொலை நடைபெறும் அளவிற்குக் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவலர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
August 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவால் கேள்விக்குறியாகும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் – தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய திமுக, தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இளைக்கும் அநீதியாகும். வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.