September 6, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊழியர் பணியிடை நீக்கம் – அரசு நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியர்களின் மீது அடக்குமுறையை கையாளும் திமுக அரசின் அதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உசிலம்பட்டி தாலுக்கா கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து மதுரை ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடக்கும் தண்ணீர் கலப்படம் தொடர்பாக எழுந்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆவின் நிர்வாகம், அதற்கு மாறாக தவறை சுட்டிக்காட்டிய ஊழியர் மீது நடவடிக்கை எடுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மதுரை மாவட்டத்தில் உள்ள 686 கிராம அளவிலான கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு பாலின் தரம் குறித்தோ, அளவு குறித்தோ உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருப்பதற்கும், இதுபோன்ற தண்ணீர் கலப்பட முறைகேடுகளுக்கும் ஆவின் உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய ஊழியர் மீதான பணியிடை நீக்க உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, ஆவின் நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் குளறுபடிகளையும் களையத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
September 6, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தஞ்சாவூரில் அடுத்தடுத்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் – பெண்கள் பாதுகாப்பில் அலட்சியப் போக்குடன் செயல்படும் திமுக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தஞ்சாவூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண் ஒருவரை லிப்ட் தருவதாக அழைத்துச் சென்ற இருவர், அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அளித்திருக்கக் கூடிய புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அப்பகுதி பெண்கள் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கு விசாரணையில் காவல்துறையும், திமுக அரசு காட்டிய அலட்சியப் போக்கே இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நிகழாவண்ணம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
September 6, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், ஏழை, எளிய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து தொடர்ந்து ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக திறம்பட மக்கள் பணியாற்றியவருமான மாபெரும் தலைவர் திரு.P.K.மூக்கையாத் தேவர் அவர்களின் குருபூஜை இன்று. தமிழக அரசியல் மட்டுமல்லாது, தேசிய அரசியலிலும் தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்து பொது சமூக மேம்பாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சமத்துவமிக்க தலைவர் திரு.P.K.மூக்கையாத் தேவர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்குவோம்.
September 6, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வினைதீர்க்கும் கடவுளாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
September 5, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேவர் குல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.சண்முகையா பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. திரு. எஸ். சண்முகையா பாண்டியன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 5, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உயிருள்ளவரை தேசத்திற்கே என் பணி என முழங்கி தாய் நாட்டிற்கு விடுதலையும், மக்களுக்கு நல்வாழ்க்கையும் கிடைத்திட வேண்டும் என்ற பொது நலத்தோடு ஒப்பற்ற சேவை புரிந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாள் இன்று. வீரியமிக்க மேடைப் பேச்சுக்களின் மூலம் இருளில் மூழ்கியிருந்த சாமானிய மக்களுக்கும் சுதந்திர உணர்வை கிளர்த்தெழச் செய்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகள் தமிழக மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
September 4, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அழிவில்லா கல்வி செல்வத்தை நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட்டு வரும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
September 4, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்திருக்கும் மாரியப்பன் தங்கவேலு அவர்களின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்க ராசிமணலில் அணை கட்ட வேண்டியது மிக அவசியமானது – தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரியும், மேட்டூர் அணையிலிருந்து உபரியாக வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ராசிமணலில் புதிய அணை கட்டுவதன் அவசியம் குறித்தும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.பி.ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். ஒகேனக்கலுக்கு மேல்பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி வன எல்லையில் ராசிமணல் பகுதியில் புதிய அணையை கட்டுவதற்காக பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அடிக்கல் நாட்டியது தொடர்பாகவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ராசிமணல் அணை கட்டுமானம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் விரிவாக விவாதித்தோம். கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் காவிரி நீரை உரிய நேரத்தில் தர மறுக்கும் கர்நாடக அரசு, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களை முன்னெடுத்து காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் நோக்கில் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற பிடிவாதப் போக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே, மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர், விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பயனின்றி வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையிலும், மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும் ராசிமணலில் அணை கட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக தொடங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
September 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும் – முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது. மத்திய நீர்வளத்துறையின் அணைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 12 மாதங்களில் ஆய்வு செய்ய பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், 12 மாதங்களில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு எனும் பெயரில் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமை பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையிலும், மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு இழைக்கும் துரோகம் ஆகும். எனவே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிற்கு துணை போகக் கூடாது எனவும் நீர்வள ஆணையத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.