January 23, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய திருநாட்டில் இருந்து ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்ற இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுதந்திர போராட்ட வீரர் வங்கம் தந்த சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று. வலிமையான இந்தியாவை உருவாக்கும் உயர்ந்த லட்சியத்தோடு மக்களிடையே தன்னம்பிக்கையையும், எழுச்சியையும் விதைத்த உலகம் போற்றும் உன்னத போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.
January 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி – அலட்சியமாக செயல்பட்ட ஆர்.கே.நகர் காவல்நிலைய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் முன்பாக, பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புளியந்தோப்பு பகுதியில் பட்டறை ஒன்றில் பணிபுரியும் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததோடு, அவரை தரக்குறைவாக நடத்தியதே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மக்களின் குறைகளையும், துன்பங்களையும் போக்கி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறியிருப்பதே இதுபோன்ற துயரச் சம்பவங்கள் காவல்நிலையம் முன்பாகவே அரங்கேற காரணமாக அமைந்துள்ளது. ஏற்கனவே, திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் காவல்நிலைய சித்ரவதைகளும், மரணங்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படும் சூழலில், தற்போது புகார் அளிக்க வருவோரையும் தொடர்ந்து தரக்குறைவாக நடத்தி அலட்சியமாக செயல்படும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆர்.கே.நகர் காவல்நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
January 20, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புதுக்கோட்டை அருகே கனிமவளக் கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை – இயற்கை வளங்களோடு, சமூக ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. ஜெகபர் அலி அவர்கள், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. திருமயம் பகுதியில் உள்ள மலைகளை உடைத்து இயற்கை வளங்களை கொள்ளையடித்துச் செல்லும் சமூக விரோதிகள் மீது வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தி வந்த திரு. ஜெகபர் அலி அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அது தொடர்பாக புகார் அளிக்கும் இயற்கை ஆர்வலர்களையும் பாதுகாக்கத் தவறியதே திரு.ஜெகபர் அலி அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சமூக ஆர்வலர் திரு.ஜெகபர் அலி அவர்கள் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 20, 2025 In ticker‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும் அகவிலைப்படி உயர்வு – பணிக்கான பணப்பலன்களைக் கூட வழங்க மறுக்கும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட எந்தவித பணப்பலன்களும் தற்போதுவரை வழங்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு பல ஆண்டுகளாக முறையாக வழங்கப்படாத நிலையில், அது தொடர்பான வழக்கில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்து திமுக அரசு காலம் தாழ்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வைக் கூட வழங்காமல் “அரசுக்கு கருணை இருக்கிறது ஆனால் நிதி இல்லை” என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. அரசின் மற்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனைத்து விதமான சலுகைகளையும் வழங்கிவரும் திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்களை மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதால் சுமார் 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பணப்பலன்களைப் பெறாமலேயே உயிரிழந்திருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், இனியும் மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தாமல், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
January 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணியை அண்டை மாநிலத்திற்கு வழங்குவதா ? – அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை அச்சிடும் பணியில் 30 சதவிகிதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் விளங்கி வரும் நிலையில், அங்குள்ள அச்சகங்களை புறக்கணித்துவிட்டு, அண்டை மாநிலத்திற்கு அப்பணியை வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இம்முடிவால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே நடைபெறும் இந்த அச்சுத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் அச்சக உரிமையாளர்களோடு, அதில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அச்சிடும் அளவிற்கான அச்சகங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களுக்கு அப்பணியை வழங்குவது ஏன்? என அச்சக உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சகங்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிக்கான ஆணையை உடனடியாக ரத்து செய்வதோடு, அச்சுத்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அச்சகங்களுக்கே முழு பணியையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
January 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை தாம்பரம் – முடிச்சூர் சாலையில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு – காவலர்களிடமே திருடர்கள் கைவரிசை காட்டும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவர், தாம்பரம் – முடிச்சூர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் அப்பகுதியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவலரின் செயினை பறித்துவிட்டு தப்பியோடியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் சேலையூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் என அடுத்தடுத்து எட்டு இடங்களில் அதே கொள்ளையர்கள் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை பார்க்கும் போது தமிழகத்தில் காவல்துறை முற்றிலும் முடங்கியுள்ளதா ? அல்லது முடக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
January 16, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைப் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.
January 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர்த்தேவை மற்றும் பாசன வசதியை பூர்த்தி செய்துவரும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்த தினம் இன்று… தனது ஒட்டுமொத்த சொத்தின் பெரும்பகுதியை செலவழித்து வறண்டு கிடந்த பூமியை வளம்பெறச் செய்ததில் இன்றியமையாத பங்களிப்பை வழங்கிய ஜான் பென்னிகுவிக் அவர்களின் அரும்பணியையும், பெருந்தன்மையையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
January 15, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் இனத்திற்கு பெரும்புகழை ஈட்டித் தரும் வகையில் மனித வாழ்வியலின் அனைத்து விதமான அங்கங்களையும் உள்ளடக்கிய உலகப் பொதுமறையான திருக்குறளை படைத்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் தினம் இன்று… சாதி, மதம், இனம், பாலின பேதமின்றி உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து, காலத்தால் அழியாத உலகப்புகழ் பெற்ற திருக்குறளை படைத்த திருவள்ளுவர் அவர்கள் காட்டிய திசையில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
January 14, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதற்காக பொதுமக்களை கைது செய்து பழிவாங்குவதா ? ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாண்டிருக்கும் திமுக அரசின் அதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது சேறு வீசியதாகக் கூறி விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலரை வீடுபுகுந்து காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பின் போது தங்களை சந்திக்க வராத அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பொதுமக்களை காவல்துறையினர் மூலம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரால் இரவோடு இரவாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த மக்களுக்கு முறையான நிவாரணம் கூட வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட்ட மக்கள் மீதே மீண்டும் அடக்குமுறையை கையாண்டிருப்பது திமுக அரசின் அதிகாரப்போக்கையே வெளிப்படுத்துகிறது. எனவே, காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, இனி வரும் காலங்களில் அப்பகுதி மீதான பழிவாங்கும் நடவடிக்கையையும் கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.