December 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக துறைத்தலைவர்கள் மீது புகார் – கல்லூரி மாணவிகளே புகார் அளித்த பின்பும் குறைந்தபட்ச விசாரணையைக் கூட நடத்த தயங்குவது யாரை பாதுகாப்பதற்காக ? திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கும், பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக அக்கல்லூரியைச் சேர்ந்த பொறுப்பு முதல்வர் மீதும், பல்வேறு துறைகளின் தலைவர்களின் மீது மாணவிகளே அளித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, துணைமுதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலமுறை புகார் அளித்திருக்கும் நிலையில், அந்த புகாரின் மீது குறைந்தபட்ச விசாரணையை கூட நடத்த மறுப்பது யாரை பாதுகாப்பதற்காக ? என்ற கேள்வி எழுந்துள்ளது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே, தற்போது திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் எழுந்திருக்கும் இந்த புகார், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாணவ, மாணவியர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், நற்பண்பையும் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும், அது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்த பின்னரும் கண்டும் காணாதது போல திமுக அரசு கடந்து செல்வதும் உயர்கல்வி பயிலவே அச்சப்படும் சூழலை உருவாக்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் உட்பட பல்வேறு துறைத்தலைவர்கள் மீது மாணவிகள் அளித்திருக்கும் புகார் மீது தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த பத்ம பூஷன் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழ் மற்றும் தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
December 28, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ஜி.கே.வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு அயராது உழைத்துக் கொண்டிருக்கும் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாவட்டம் மேலூரில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத புதிய பேருந்து நிலையம் – பொதுமக்கள் நலனில் அலட்சியம் காட்டும் திமுக அரசு நிர்வாகத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மதுரை மாவட்டம் மேலூரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகள் முழுமையாக முடிந்த பின்னரும் திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால், பள்ளிக்குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினருமே வெயிலிலும், மழையிலும் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 6.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மீது அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் மதுரை மேலூரில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 27, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.மன்மோகன்சிங் அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பெரும்பங்கு வகித்த திரு.மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாள்தோறும் பல்வேறு விதமான இன்னல்களுக்குள்ளாகும் பொதுமக்களே திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள் – தமிழக பாஜக தலைவர் அன்புச் சகோதரர் திரு.அண்ணாமலை அவர்கள் தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் முடிவை கைவிட வேண்டும்.
December 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆயிரக்கணக்கான உயிர்களையும், கணக்கிலடங்காத உடமைகளையும் பறித்துச் சென்று ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் எக்காலத்திற்கும் அழியாத வடுக்களாக பதிந்திருக்கும் சுனாமி எனும் ஆழிப்பேரலை ஏற்பட்டதன் நினைவு தினம் இன்று. ஆண்டுகள் பல கடந்தாலும் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தற்போது வரை மீண்டு வர முடியாத நிலையிலும், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலாலும், அராஜகத்தாலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக மீனவ மக்களுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அவர்களின் மேம்பாட்டிற்கு தேவையான நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்திட முன்வர வேண்டும்.
December 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகியா ? திமுகவினரையும் குற்றச்சம்பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாகவே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகியுள்ளன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்கனவே பலமுறை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகாருக்குள்ளான ஞானசேகரன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததும், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை முறையாக காவல்துறை கண்காணிக்கத் தவறியதே மீண்டும் மீண்டும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல், அரசியல் பிரமுகர்கள் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் திமுகவினரின் தலையீடு இல்லாமல் நடக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் அண்ணா பல்கலைகழக விடுதியில் தங்கி பயின்று வரும் சூழலில், அந்த வளாகத்தில் குறைந்தபட்ச சிசிடிவி கேமராக்கள் கூட இயங்காமல் பழுதடைந்த நிலையில் இருந்திருப்பது மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறையின் அலட்சியப்போக்கையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, பலமான பாதுகாப்பு வளையம் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி ? இதற்கு முன் எத்தனை மாணவிகளை வீடியோ பதிவு செய்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார் ? கைது செய்யப்பட்ட ஞானசேகரின் கூட்டாளிகள் யார் ? யார் உதவியோடு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் ? என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த குற்றச்சம்பவத்திற்கு காரணமான அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
December 26, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஐயா திரு.நல்லகண்ணு அவர்களின் நூறாவது பிறந்த தினம் இன்று… எளிமையான வாழ்க்கைக்கும், பொதுவாழ்வில் நேர்மைக்கும் தலைசிறந்த உதாரணமாக திகழும் ஐயா திரு.நல்லகண்ணு அவர்கள் பூரண உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
December 25, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும் – பத்து மாத காலமாக தூங்கிவிட்டு பதவியை விட்டு விலகுவேன் என நாடகமாடிய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாபட்டி மற்றும் நாயக்கர்பட்டி பகுதிகளில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மத்திய அரசின் சுரங்கத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்க குறிப்பு திமுக அரசின் இரட்டை வேட முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு கோரிய அனைத்து விவரங்களையும் வழங்கி, அந்த சுரங்கம் அமைய அனைத்து வழிகளிலும் உறுதுணையாக இருந்துவிட்டு மக்கள் எதிர்ப்புக்கு பின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் நடத்திய கபடநாடகமும் பொதுமக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏல அறிவிப்பு வெளியானது முதல் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ஏலம் முடிவுக்கு வரும் வரை சுமார் பத்து மாத காலம் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, மக்களின் தொடர் போராட்டத்திற்கு பின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றுவதும், பதவியை விட்டு விலகுவேன் என முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயலே தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. அதே நேரத்தில், பல்லுயிர்ப் பெருக்கம் சார்ந்த பகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் சுரங்கத்துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், இத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டால் மட்டுமே மேலூர் தாலுக்காவில் உள்ள தொல்லியல் சின்னங்களும், இயற்கை வளங்களும் பாதுகாக்கப்படும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பல்லுயிர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, தமிழர்களின் பண்டைய கால வரலாற்றையும் அழிக்கும் வகையிலான டங்ஸ்டன் திட்டத்திற்கான அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், மக்கள் விரும்பாத இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பிள்ளையார்சுழி போட்டு மாபெரும் துரோகம் இழைத்த திமுக அரசும், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் மதுரை மாவட்ட மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.