தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தேர்தல் உயர்நிலைக்குழு தலைவரும், கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.O.R ராமச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.O.R ராமச்சந்திரன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஜார்கண்ட் மாநிலத்தின் வனப்பகுதிகளில் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியின் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வரும் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த திரு.சுகுமாரன் அவர்கள், கண்ணிவெடியில் சிக்கி படுகாயமடைந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கண்ணிவெடி வெடித்துச் சிதறியதில் ஒரு காலை இழந்திருக்கும் வீரர் திரு.சுகுமாரன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல், விடுதலை அடைந்த தேசத்தின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட பெருந்தலைவரும், தமிழகம் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய தன்னலமற்ற தலைவருமான கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவுதினம் இன்று. எளிமை, நேர்மை, தூய்மை எனும் தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டு தமிழ் வளர்ச்சி, கல்விப் புரட்சி, தொழில் வளர்ச்சி, பாசனத் திட்டங்கள் என தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலத்திற்காக மட்டுமே அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்.

மனிதகுலத்தின் மிகப்பெரிய சக்தி அகிம்சை தான் என முழங்கி, சத்தியாகிரகம் எனும் அறவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்ற தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினம் இன்று அன்பு, அகிம்சை, அமைதியை நாட்டு மக்களுக்கு போதித்ததோடு, தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்து இந்திய சரித்திரத்தில் புகழ்மிக்க சகாப்தங்களை படைத்த மகாத்மா காந்தி அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

ஈரப்பதம் அதிகளவில் இருப்பதாக கூறி நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள் – குறுவை பருவ நெல் கொள்முதலில் ஈரப்பதத்தின் அளவை 20 சதவிகிதமாக உயர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை சாகுபடியின் அறுவடைக்கான பணிகள் அண்மையில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு சில தினங்களாக காவிரி டெல்டா பகுதிகளில் பெய்துவரும் மழையால் நிர்ணயிக்கப்பட்ட 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஈரப்பதம் இருப்பதாக கூறி அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடி மற்றும் அறுவடை காலத்தில் மழை பெய்வது தொடர்கதையாகி வரும் நிலையில், ஏற்கனவே கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா பகுதி விவசாயிகள், நெல் ஈரப்பதத்தை குறைக்க கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கொள்முதல் செய்யப்படும் ஈரப்பதத்தின் அளவை 17 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.