July 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இயங்கி வரும் உழவர் சந்தையின் கழிவறை ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்யும் நியாயவிலைக்கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.ஏற்கனவே, தரமற்ற பொருட்கள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் நியாயவிலைக்கடைகள் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்திருக்கிறது. திமுக அரசின்அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், துளியளவும் சுகாதாரமற்ற கழிவறையில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருக்கும் அரிசியைச் சமைத்து உண்பார்களா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? என்ற அடுக்கடுக்கான கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.எனவே, ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்குச் சுகாதாரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ திரு.நம்பெருமாள் சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மதுரையில் எளிமையாகத் தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையை உலகளவில் சிறந்த மருத்துவமனையாக மாற்றியதில் அளப்பரிய பங்காற்றிய மருத்துவர் திரு. நம்பெருமாள் சாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
July 24, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது.கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும், செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
July 22, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்பவும், மக்கள் பணியைத் தொடரவும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
July 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான திரு.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. திரு.அச்சுதானந்தன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் சக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
July 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியத் திரையுலகின் பல்கலைக்கழகமாக விளங்கியவரும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை தேடித்தந்தவருமான நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுதினம் இன்று. தனது உடல்மொழியாலும், உணர்வுப்பூர்வமான வசன உச்சரிப்பாலும் நாட்டு மக்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
July 21, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் வாயிலில் மாணவ, மாணவியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவதா? – திமுகவின் ஆட்சி, அதிகார துஷ்பிரயோகத்திற்கு மக்கள் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைப்பது உறுதி. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுகவில் இணைவதற்கான உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் சேர்க்கை எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத் தொகை வருகிறதா? இலவச பேருந்தில் தானே பயணம் செய்கிறீர்கள்? என மிரட்டி ஆதார் மற்றும் தொலைப்பேசி எண்களைப் பெற்றுக் கொண்ட திமுகவினர், தற்போது கல்லூரிகளின் வாயிலில் நின்று மாணவர்களிடம் துண்டறிக்கை விநியோகிப்பது கடும் கண்டனத்திற்குரியது. உதவிப் பேராசிரியர்கள் தொடங்கி முதல்வர்கள் வரை கல்லூரிகளில் காலியாக இருக்கும் பல ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்பிடவும், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, கல்லூரி வாயிலில் நின்று துண்டறிக்கை விநியோகிப்பதும், அவர்களை திமுகவில் இணைக்க முயற்சிப்பதும் முழுக்க முழுக்க அதிகார துஷ்பிரயோகம் ஆகும். கட்சிக் கொடியுடன் கல்லூரி வாயில்களை மறித்து கும்பலாக நிற்கும் திமுகவினரைக் கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ, மாணவியர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவினரின் இத்தகைய செயல்பாடுகள் கல்விக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பது முதலமைச்சருக்குத் தெரியவில்லையா ? ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று மிரட்டினாலும், கல்லூரி வாயிலில் நின்று கூவிக்கூவி துண்டறிக்கை வழங்கினாலும் திமுக ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தமிழக மக்கள் அதற்கான பாடத்தை வரவிருக்கும் தேர்தலில் புகட்டுவது நிச்சயம் என்பதை இந்நேரத்தில் கூறிக் கொள்கிறேன்.
July 19, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்களின் மூத்த புதல்வரும், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான திரு.மு.க.முத்து அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி வருத்தமளிக்கிறது. திரு.மு.க.முத்து அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
July 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா திமுகவினர்?நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.<எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன்.
July 18, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நேர்மையாகப் பணியாற்றுவதால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் புகார் – காவல்துறையில் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசுதான் இந்த நெருக்கடியா?காவல்துறையில் நேர்மையாகப் பணியாற்றுவதால் தாங்க முடியாத அளவிற்கு நெருக்கடிக் கொடுப்பதாக உயர் அதிகாரிகள் மீது மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறையின் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நாள் முதல் அங்கு நடைபெற்ற சட்டவிரோத மதுவிற்பனைகளைத் தடுத்து நிறுத்தியதோடு, அச்செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து சிறையில் அடைத்த நேர்மையான அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவருக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பந்தோபஸ்து எனும் பெயரில் அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அலைக்கழித்திருப்பதோடு, தான் பயன்படுத்தி வந்த வாகனத்தையும் திட்டமிட்டுப் பறித்ததில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி அரசின் உளவுத்துறை உயர் அதிகாரிகள் வரை தொடர்பிருப்பதாகத் திரு.சுந்தரேசன் அவர்கள் தனக்கு துறைரீதியாக ஏற்பட்ட அழுத்தங்களை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் மகத்தான பணியைச் செய்யும் காவல்துறையில் உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்படும் அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தும், அதற்கு நேர்மாறாக பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை ஊக்குவித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயலும் அதிகாரிகளையும் உயர் அதிகாரிகளின் வழியாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் திமுக அரசு சமூக விரோதிகளுக்கான அரசு என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு நெருக்கடி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வகையில், காவல்துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.