அரசியல் எதிரிகளையும், நம்பிக்கைத் துரோகிகளையும் அடியோடு வீழ்த்தி இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைக்க தொடங்கப்பட்ட நம் கழகத்தின் பொருளாளராகவும், போர்ப்படை தளபதியாகவும் திகழ்ந்த எனது அருமை நண்பர் திரு.வெற்றிவேல் அவர்களின் நினைவுதினம் இன்று. தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு தான் கொண்ட கொள்கையிலும், லட்சியப் பயணத்திலும் இறுதிவரை உறுதியாக இருந்த அருமை நண்பர் திரு.வெற்றிவேல் அவர்கள் கழகத்திற்காக ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்வோம்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தினபூமி நாளிதழின் உரிமையாளர் திரு.மணிமாறன் அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரு.மணிமாறன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திரு.மணிமாறன் அவர்களின் மகன் திரு.சதீஷ் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்பிட எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பருவமழை பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கும் என அறிவித்திருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் அதனை ஒட்டிய திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது நடப்பாண்டு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்திருக்கும் நிலையில், கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளும், அவரவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களே அரசு நிர்வாகத்தின் தோல்வியையும், திறமையின்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதுகாப்போடு இருப்பதோடு, அவரவர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற அடிப்படை உதவிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட போதுமான உதவிகளை செய்திடுமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் துவரம்பருப்புக்கு கடும் தட்டுப்பாடு – ஒப்பந்த நிறுவனங்களுக்கு சலுகையை வழங்கி பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான துவரம் பருப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு துவரம்பருப்பு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், ஒப்பந்தத்தின் படி உரிய நேரத்தில் துவரம்பருப்பை விநியோகம் செய்யாமல் காலம் தாழ்த்துவதே நியாயவிலைக்கடைகளில் தட்டுப்பாடு நிலவ முக்கிய காரணம் என கூறப்படுகிறது. நியாயவிலைக்கடைகளில் வழங்கபடும் சர்க்கரையின் அளவு உயர்த்தி வழங்கப்படும், நிறுத்தப்பட்ட உளுத்தம்பருப்பு மீண்டும் விநியோகம் செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பு வழங்கிய வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றாத திமுக அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த துவரம்பருப்பையும் முறையாக வழங்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் படி 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம்பருப்பை கொள்முதல் செய்வதற்கு பதிலாக தரம் குறைந்த கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு இயற்கையானதா ? அல்லது கனடா மஞ்சள் பருப்பை கொள்முதல் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட செயற்கை தட்டுப்பாடா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடமிருந்து உரிய துவரம்பருப்பை கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

ஊடகத்துறையில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ராஜ் குழும தொலைக்காட்சிகளுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு கோணங்களில் கிடைக்கும் செய்திகளை அதன் உண்மைத் தன்மை மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தலை சிறந்த செய்தி தொலைக்காட்சியாகவும், பாரம்பரியமிக்க நிறுவனமாகவும் செயல்பட்டு வரும் ராஜ் குழும தொலைக்காட்சிகளின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. மக்களின் பிரச்னைகளை மட்டுமே கூறிவிட்டு கடந்து செல்லாமல் அதற்கான தீர்வையும் நோக்கி பயணிக்கும் ராஜ் தொலைக்காட்சி, எந்தவித விருப்பு வெறுப்புமின்றி தொடர்ந்து நடுநிலையோடு பயணித்து மென்மேலும் பல சாதனைகள் படைக்க மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவரும், பொதுநலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான திரு. P.K மூக்கையாத் தேவர் அவர்களின் மூத்த மகன் திரு. P.K.M சுப்பிரமணியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. திரு. P.K.M சுப்பிரமணியன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருப்பது துரதிஷ்டவசமானது. ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து பயணிகளும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கும் இதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற ரயில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

சென்னையில் சேதமடைந்த சாலைகளிலும் பள்ளங்களிலும் தேங்கிநிற்கும் மழைநீரால் அதிகரிக்கும் விபத்துக்கள் – பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர், குண்டும் குழியுமான ஆலந்தூர் சுரங்கப்பாதையில் நிலை தடுமாறிய தனியார் நிறுவனத்தின் இளம்பெண் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே சாலைப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள், முறையாக மூடப்படாததன் காரணமாக அதில் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாவதையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கத் தவறிய தமிழக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருக்கும் குழிகள் என ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களை சீரமைப்பதில் மாநகராட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியம் குறித்தும், ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்தும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததே விபத்துக்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சேதமடைந்திருக்கும் சாலைகளை உடனடியாக சீரமைப்பதோடு, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.