தஞ்சை வடக்கு வீதியில் இயங்கிவரும் குடோனில் இருந்து 15 டன் போலி உரம் பறிமுதல் – விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் போலி உர விற்பனையை அடியோடு தடுக்க வேண்டியது திமுக அரசின் கடமை.தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வீதியில் இயங்கிவந்த குடோனில் இருந்து 15 டன் போலி உரம் தரக்கட்டுப்பாடு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போலி உர விற்பனை விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்லில் தொடங்கி பூச்சிமருந்து, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வரை நிலவும் பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்தியே தனியார் நிறுவனங்கள் போலி உரங்களை தயாரித்து விற்பனை செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, மழை,புயல், வெள்ளம்,வறட்சி, விளைச்சல் பாதிப்பு என பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு மத்தியிலும், தூர்வாரப்படாத வாய்க்கால்கள், கடைமடை வரை வந்து சேராத தண்ணீர் போன்ற அரசு நிர்வாகத்தின் அலட்சியங்களுக்கு மத்தியிலும் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது அவ்விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்திலும் முறைகேடு கண்டறியப்பட்டிருப்பது விளைச்சலை பாதிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.எனவே, தஞ்சாவூரில் போலி உரம் தயாரித்து விற்பனை செய்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, மாவட்ட அளவில் குழு அமைத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் உரத்தின் தரத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனவும் வேளாண்மைத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

திருப்பூர் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் – பள்ளிக்கூடங்களை மதுபானக்கூடங்களாகவும், சட்டவிரோதிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாவட்டம் உடுமைலையை அடுத்துள்ள காரத்தொழுவில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் இரவு, பகலாக சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையையும், பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசால், அரசுப்பள்ளிகள் மதுபானக்கூடங்களாக மாறிவருவதோடு, அதனை தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதன் உச்சபட்சத்தை அடையும் என்பதற்கு நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களே சாட்சியாக இருக்கும் நிலையில், தற்போது அரசுப்பள்ளிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அளவிற்கு மெத்தனப்போக்குடன் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, பெட்ரோல் ஊற்றி தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியருக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, பள்ளி வளாகத்தில் மது அருந்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென்காசியில் மாதிரி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டதாக புகார் – பெற்றோர்கள் புகாருக்கு பின்பும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது.தென்காசி மாவட்டம் அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அழுகிய முட்டைகளும், தரமற்ற உணவும் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ வேண்டிய அரசு மாதிரிப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமற்ற உணவை விநியோகித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதோடு, அவை தயாரிக்கும் முறையும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகள் தட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, என அடுக்கடுக்கான புகார்களுக்கு உள்ளாகி வரும் அரசுப்பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது அப்பள்ளிகளின் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தரமான உணவு வழங்குவதோடு, அவர்கள் பயிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

பதவி உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பாதுகாப்பு கோரி நடைபெறும் வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு – வருவாய்த்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.பதவி உயர்வு, பணி நிரந்தரம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.நில உடமையில் தொடங்கி சமூக பாதுகாப்பு, பல்வேறு விதமான சான்றிதழ் என நாள்தோறும் நாடக்கூடிய வருவாய்த்துறையின் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு வேண்டிய பல்வேறுவிதமான சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மணல் கொள்ளையில் தொடங்கி பல்வேறு வகைகளில் நடைபெற்றுவரும் சட்டவிரோதச் செயல்களை தடுக்க முற்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான தொடர் கொலைவெறித்தாக்குதல் சம்பவங்களுக்கு தீர்வு காண முடியாத திமுக அரசால், தற்போது தங்களுக்கென பணி பாதுகாப்புச் சட்டம் கோரி அரசு ஊழியர்களே போராடும் அளவிற்கான அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.எனவே, தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என வருவாய்த்துறை கூட்டமைப்பினர் அறிவித்திருக்கும் நிலையில், பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுவதோடு, அரசு ஊழியர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது – விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.பரம்பிகுளம் – ஆழியாறு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வழங்க வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதியில் கடைமடையாக உள்ள 50க்கும் அதிகமான கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பாசன நிலங்களுக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்காததன் விளைவே, கால்நடைகளோடும், விவசாய உபகரணங்களோடும் விவசாயிகள் மறியலில் ஈடுபடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும், கடைமடை பாசனத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகளின் மீது காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் நலனை காக்கிறோம் எனும் பெயரில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்களை கையகப்படுத்துவதையும், தடுக்க முற்படும் விவசாயிகளின் மீது அடக்குமுறையை ஏவுவதையுமே வாடிக்கையாக கொண்டிருப்பது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். எனவே, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் தேவையான தண்ணீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சியமைந்த பின்பு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் சரிவு – திமுக ஆட்சியின் சமூக நீதி நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திமுக ஆட்சியமைந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, அப்பள்ளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களை கூட நியமிக்கத் தவறியதே மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் என்ற புகார் எழுந்திருக்கிறது. தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஆதிதிராவிட பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 6, 240 பணியிடங்களில் 1, 177 பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆதிதிராவிட மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகளில் நவீன உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக திமுக அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து வேறுபள்ளிக்கு மாற வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தோற்றுவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

தென்காசி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் கழன்று விழுந்து விபத்து – அரசுப்பேருந்துகளில் பயணிக்கவே பொதுமக்கள் அச்சப்படும் சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. மதுரை – குற்றாலம் இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்து தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது தீடிரென பின்பக்க சக்கரங்கள் கழன்று விபத்துக்குள்ளாகியதில் 3 மாணவர்கள் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசுப் பேருந்துகள் ஒடிக் கொண்டிருக்கும் போதே அச்சு முறிந்து நடுவழியில் நிற்பதையும், பிரேக் பிடிக்காமல் அடிக்கடி சாலைத் தடுப்புகளில் மோதி விபத்திற்குள்ளாவதையும் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் கண்டுகொள்ளாத போக்குவரத்துத்துறையால் பேருந்தின் பின்பக்க இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று ஓடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஓடிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு நிகழ்ந்த விபத்தில் தொடங்கி, திருச்சியில் நடத்துனரின் இருக்கை கழன்று நடைபெற்ற விபத்து வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், அப்பேருந்துகளை முறையாக பராமரிக்கவோ, புதிய பேருந்துகளை வாங்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் காலாவதியான பேருந்துகளும், தகுதியற்ற பேருந்துகளுமே இயக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் வாங்கவும், பழைய பேருந்துகளை பராமரிக்கவும் ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் எங்கே செல்கிறது என்ற கேள்வியை அனைவரின் மத்தியிலும் எழுப்புகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயணிக்கும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் தொகையை முழுமையாக பயன்படுத்தி புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.