September 8, 2025 In ticker‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பீகாரில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய கோப்பை வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் இந்திய ஹாக்கி அணி வீரர்களின் சாதனைப் பயணம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடரிலும் நீடிக்கட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
September 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முன்னாள் அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் அவர்களின் தாயார் திருமதி மீனாள் அம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் திரு ஆர்.பி.உதயகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
September 8, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாஞ்சாலங்குறிச்சி மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் தலைசிறந்த படைத்தளபதியாகவும், இந்திய சுதந்திரப் போரில் முதல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படைகளை அழித்தொழித்த மாவீரருமான சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவுதினம் இன்று. போர்க்களத்தில் ஆங்கிலேய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததோடு, தாய் மண்ணையும், மக்களையும் காத்திட தன் உயிரையும் துறந்து வீரமரணமடைந்த தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் நினைவை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
September 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காவல்துறை தலைமையக வாயிலில் வைத்தே புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திரு.ஏர்போர்ட் மூர்த்தியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுத்து நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவோ எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாமல், அங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையின் தலைமையகம் முன்பாகவே நடைபெற்றிருக்கும் இந்த தாக்குதல் சம்பவம், தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறைக்குமான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, திரு.ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனி இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அழிவில்லா செல்வமாம் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த இந்நாளில் கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, பொது அறிவு ஆகியவற்றையும் சேர்த்து போதித்து, எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் சமுதாய மேம்பாட்டிற்கென இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களின் மகத்தான பணியை இந்நாளில் போற்றி கொண்டாடிவோம்.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினமான இன்று, நெற்கட்டும் செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வு – ஏழை, எளிய மக்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.தமிழகத்தில் விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான சுங்கக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 40 சுங்கச்சாவடிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 38 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது உயர்ந்திருக்கும் இந்த சுங்கக் கட்டணம் ஏழை, எளிய மக்களின் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படும் சுங்கக் கட்டணத்தால் சரக்கு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணங்கள் உயர்வதோடு, பேருந்துக் கட்டணங்கள் உயர்வதற்கான அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
September 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியும் நெற்கட்டும் செவலை திறம்பட ஆட்சி செய்த மாமன்னருமான பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு வரிகட்ட மறுத்து, அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு அகற்றும் வகையில் தமிழக மக்கள் மத்தியில் சுதந்திர வேள்வியை விதைத்த மாவீரர் பூலித்தேவர் அவர்களின் வீரத்தையும் துணிச்சலையும் அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
August 30, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசியல் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் கோலோச்சிய ஆளுமைமிக்கத்தலைவரும்,பொதுவாழ்க்கையில் நேர்மைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்களின் நினைவு தினம் இன்று. ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் நலனுக்காகவும், பொதுச்சேவைக்காகவும் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்த ஐயா திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் மக்களுக்கும், நாட்டிற்கும் ஆற்றிய அரும்பெரும் பணிகள் எந்நாளும் நிலைத்து நிற்கும்.
August 29, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடையும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் – சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் எதிர்காலத்தோடும் விளையாடும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தில் மட்டும் நிலவும் சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், சுமார் 500க்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருப்பதோடு மழலைக் குழந்தைகளின் ஆரம்பகால கல்வியும் ஊட்டச்சத்து தேவையும் கேள்விக்குறியாகியுள்ளது.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப்பணியாளர்களாக பணியமர்த்துவதோடு, அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்ற திமுகவின் 313வது தேர்தல் வாக்குறுதி இனியும் நிறைவேறும் என்ற நம்பிக்கையை இழந்த சத்துணவுப் பணியாளர்கள் வேறுவழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு,நிர்வாகத் திறனின்றி காலிப்பணியிடங்களை நிரப்பாமல் கால தாமதம் ஏற்படுத்துவதோடு, ஏற்கனவே அரசின் பல்வேறு பல்வேறு துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களைக் கூட பணிநிரந்தரம் செய்ய மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, சத்துணவுப் பணியாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்வதோடு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.