தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், கோடை விடுமுறைக்கு மக்கள் வெளியூர்களுக்கு பயணிக்க முடியாமல் திண்டாடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான ஓட்டுநர்கள் பணிஓய்வு பெற்றதாலும், பேருந்துகளை இயக்குவதற்கு ஓட்டுநர்கள் தயாராக இருந்தாலும் உரிய முறையில் அவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படாததால் பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரம் போக்குவரத்துறையின் நிர்வாக குளறுபடியால் போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டமடைந்திருப்பதாகக் கூறி பேருந்து சேவையை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதாக ஆளும் கட்சியின் தொழிற்சங்கமே குற்றஞ்சாட்டி இருப்பதும், தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் பேருந்து சேவை குறைக்கப்பட்டிருப்பது தனியாருக்கு தாரைவார்க்கும் முன்னோட்டமோ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே போக்குவரத்து துறையில் முறைகேடுகளைக் களைந்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதுடன், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், பேருந்துகளை இயக்க பாரபட்சமின்றி பணி வாய்ப்புகளை வழங்கி பயணிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நடிகரும், இயக்குநருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன். உதவி இயக்குநராக திரையுலகில் கால் பதித்து, தற்போதைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் திறம்பட நடித்து ரசிகர்களை மகிழ்வித்தவர். மனோபாலா அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மனோபாலா மறைவால் வாடும் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், சக திரை கலைஞர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பழனிசாமி ஆட்சியில் கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வரும் செய்திகளை விசாரித்து, ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பல ஆண்டுகளாக பழுதாக இருந்த சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய பின் அந்த நிதியைக்கொண்டு வேறு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. உப்புத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று எதுகை மோனையில் வீடியோ வெளியிடும் முதல்வர், தனது ஆட்சியின் கீழ் பணி செய்யும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த முறைகேட்டை மூடி மறைத்து ஊழலுக்குத் துணை போயுள்ளனர் என்பதை அறிவாரா? கடந்த ஆட்சியில் ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த விடியா அரசு, கடந்த கால ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு மற்றொரு முறைகேடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்!

மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கனிம வளக் கொள்ளைகளைத் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் படுகொலை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி என சொல்லி, ஒருபுறம் மக்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. மறுபுறம் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் நேர்மையான அதிகாரிகள் மீது தாக்குதலும், படுகொலைகளும் சமூக விரோதிகளால் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தீர்வு என்றால் இந்தப் படுபாதக செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை என்ன? இந்த சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..?

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.