February 4, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழகத்தில் நேர்காணல் மூலம் அவசரகதியில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை நியமிக்க முடிவா ? மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் நேர்காணல் (Walk In Interview) மூலம் 207 மகப்பேறு மருத்துவர்கள் உட்பட 658 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற சுகாதாரத்துறை அமைச்சரின் திடீர் அறிவிப்பு அரசு மருத்துவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அதனையும் மீறி நேர்காணல் மூலமாக மருத்துவர்களை நியமிக்க முடிவு செய்திருப்பது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காத திமுக அரசு, தற்போது நேர்காணல் முறையில் அவசரகதியில் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? என மருத்துவ சங்கங்கள் கேள்வி எழுப்புகின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது இதே நேர்காணல் முறையில் நடைபெற இருந்த மருத்துவர்கள் நியமனத்தை எதிர்த்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரான பின்பு அதே முறையே பின்பற்றி மருத்துவர்களை நியமிக்க முயற்சி செய்வது மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவர்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, மகப்பேறு மருத்துவர்கள் உட்பட சிறப்பு மருத்துவர்களை நேர்காணல் மூலமாக நியமனம் செய்யும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
February 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களின் வரிசையில் பெட்ரோல் குண்டு கலாச்சாரமும் தலைதூக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சத்தில் இருப்பதை பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டுவரும் காவல்துறையால், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டிய காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கான அசாதாரண சூழல் உருவாக்கியுள்ளது. எனவே, ராணிப்பேட்டை சிப்காட் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்குவதோடு, மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கும், காவல்நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
February 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் கொலை செய்ய முயற்சியா ? – காவல்துறை ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக் அவர்களின் புகார் மனு மீது விரிவான விசாரணை நடத்த வேண்டும். காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டிய பிறகு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தயாரிக்கப்பட்ட புதிய பட்டியலை கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரிபார்க்கச் சென்ற போது தனது அலுவலகத்தில் தீ பற்றி எரிந்ததாகவும் அதன் மூலம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாகவும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி கல்பனா நாயக் அவர்கள் காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரே குற்றம் சாட்டியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கட்டுப்படுத்த முடியாத அளவு உச்சத்திற்கு சென்றிருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஐ.பி.எஸ் அதிகாரி கல்பனா நாயக் அவர்கள் அளித்த புகாரின் மீது விரிவான விசாரணை நடத்தி, இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
February 3, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் உறுப்பினரும், அன்புச் சகோதரருமான திரு.ஓ.பி.ரவீந்திரநாத் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரு.ஓ.பி.ரவீந்திரநாத் அவர்கள் பூரண உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
February 3, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ் உயரவும், தமிழர்கள் தமது உரிமையை பெற்றிடவும் தமிழக அரசியல் வரலாற்றை புரட்டிப் போட்ட அரசியல் ஞானி, தாய்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டி தமிழக மக்களின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எந்நாளும் நிலைத்து நிற்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று. தெளிவான சிந்தனை, ஆற்றல் மிக்க பேச்சு மற்றும் உணர்ச்சிப் பூர்வமான எழுத்துகளால் தமிழ்ச் சமுதாயத்தை தட்டி எழுப்பியதோடு, தாம் வகுத்த இலக்கணங்களுக்கு தாமே இலக்கியமாக வாழ்ந்து காட்டிய மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழும் அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளும் தமிழ் இனம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும்.
February 2, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா ?- விசாரணை எனும் பெயரில் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளைப் போல சித்தரிப்பது கடும் கண்டனத்திற்குரியது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) முன்பாக ஆஜராகும் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளை போல நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வாட்ஸ் அப் மூலமாக சம்மன் அனுப்புவதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆஜராகும் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதும், வழக்கிற்கு சிறிதளவும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு அவர்களை அச்சுறுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அதனை பொதுவெளியில் கசிய வைத்துவிட்டு, அப்பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நிற்கும் பத்திரிகையாளர்கள் மீது பழியை போட முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதையும், அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்வதையும் உடனடியாக நிறுத்துவதோடு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவையும், தமிழக காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.
February 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏழை, எளிய மக்களுக்கு நம்பிக்கை தரும் பட்ஜெட்: தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 12 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது குடிமக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.
February 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவண்ணாமலை அருகே மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் – பள்ளிக் குழந்தைகளை தீப்பந்த வெளிச்சத்தில் படிக்க வைத்திருப்பதுதான் திமுக அரசு தந்த விடியலா ? திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவித்து வருவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. மத்திய அரசின் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு, அடிப்படை வசதிகளில் ஒன்றான மின்சார இணைப்பைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக மின்சாரத்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. மின்சார வசதி இல்லாத காரணத்தினால் பள்ளி செல்லும் குழந்தைகள் தீப்பந்த வெளிச்சத்தில் கல்வி பயிலும் அவல நிலை ஏற்பட்டிருப்பதோடு, இரவு நேரங்களில் விஷ ஜந்துகளுக்கு பயந்து அச்சத்துடனே உறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டம் தென்சேந்தமங்கலம் கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதோடு, அப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மின்சார இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மின்சாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TANGEDCO_Offcl
February 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விடுதலைப் போராட்ட வீரர்களில் முதன்மையானவரும், சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் பிறந்த தினம் இன்று. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முழங்கி ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் எண்ணற்ற சட்டங்களை இயற்றி, தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை மாறாமல் வாழ்ந்து மறைந்த மாமனிதர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் அரும்பணிகளை போற்றி வணங்கிடுவோம்.
February 1, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அடிப்படை வசதிகளின்றி அவலநிலையில் இயங்கி வரும் அரசுப்பள்ளிகளால் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று நேரடியாக ஆய்வு நடத்தியதின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் Annual Status Of Education Report எனும் ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் குறித்தும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறன் குறித்தும் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 30 மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவ, மாணவியர்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட ஆய்வில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட தமிழகத்தின் கல்வித்தரம் அதளபாதாளத்திற்கு சென்றிருப்பது உறுதியாகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை விகிதத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது நடப்பாண்டு கணிசமாக குறைந்திருப்பதோடு, பல பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான குடிநீர், வகுப்பறைகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்பதும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அரசுப்பள்ளிகளில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் வகுப்பறைகளை சீரமைப்பதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களில் 64 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட பயில முடியாத அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது. எனவே, இனியும் அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளம் என விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றாமல், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி அரசுப்பள்ளிகளில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பி மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu@tnschoolsedu