தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று செய்திகள் வருகின்றன. இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? எத்தனை பேர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பதில் வெளிப்படை தன்மை இல்லை. அரசு துறைகளில் முழுமையாக லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இந்த அரசுக்கு இருக்குமானால், சோதனைக்கு உள்ளான அரசு அலுவலகங்களில் இருந்து கைப்பப்பற்றப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள், துறைகளின் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தீயசக்தி திமுகவின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ரவுடிகளைப் போல திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார். திமுகவினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தீய சக்திகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்தை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?

தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.அதே போல இந்திய மொழிகளில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்திருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த படைப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும். வலுவான ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தால் மட்டுமே அநியாய உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தி.மு.க. அரசு திட்டமிடுவதாக ஆளுங்கட்சி தொழிற்சங்கமே குற்றம்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சரே கூறியிருப்பதன் மூலம் பேருந்து போக்குவரத்து, தனியார் மயமாக்கப்படும் என்பது உறுதியாக தெரியவருகிறது. மக்களுக்கு குறைந்த செலவில் பொதுப்போக்குவரத்தை வழங்கும் கடமையில் இருந்து அரசு விலகி, தனியார் மயமாக்க முடிவு செய்வது ஏற்கதக்கதல்ல. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இருதரப்பையும் பாதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். போக்குவரத்துறையில் புரையோடியிருக்கும் முறைகேடுகளை களையெடுத்து லாபநோக்கில் போக்குவரத்துறையை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.