September 19, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களில், மழைநீர் தேங்குவதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பல இடங்களில் வடிகால் மற்றும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் முறையான அறிவிப்பு பலகைகளோ, பாதுகாப்பு தடுப்புகளோ வைக்கப்படாத காரணத்தினால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் நாளிதழ் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பதோடு, பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் மற்றும் தடுப்புகள் வைத்து விபத்தை தடுக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
September 18, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் திரு.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுதினம் இன்று. ”கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்” என முழங்கி மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, உரிமை, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தந்ததோடு சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் தன் இறுதி மூச்சு வரை போராடிய திரு. #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களை எந்நாளும் நினைவில் கொள்வோம்.
September 17, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.
September 17, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பகுத்தறிவு பகலவன், சமூக தீமைகளுக்கு எதிராக எவ்வித சமரசமும் இன்றி போராடிய தீர்க்கதரசி தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாளான இன்று, சென்னை-அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
September 17, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !
September 16, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4048 பேருக்கும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 300க்கும் அதிகமானோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் நாளிதழ்களில் வெளியாகி இருக்கும் செய்தி வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதனை உருவாக்கும் ஏடிஸ் கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொசு ஒழிப்பு பணியை தமிழ்நாடு முழுவதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புடன் வருவோருக்கு டெங்கு பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக பரிசோதனை கருவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் டெங்கு உறுதி செய்யப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கணக்கெடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை மீட்க தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்துவதோடு, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
September 16, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயலாற்றியவரும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன் வாழ்நாள் முழுவதும் போராடியவருமான திரு.எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாள் இன்று. விவசாய குடும்பத்தில் பிறந்து ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு செலுத்திய திரு.ராமசாமி படையாட்சியார் அவர்கள் பிறந்த இந்நாளில் அவரின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றிட உறுதியேற்போம்.
September 15, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், அறிவுலக ஆசான் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று, கும்பகோணம் சுவாமி மலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
September 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 19 மீனவர்களை கைது செய்ததோடு அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் அபாயம் எழுந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதும் தாக்குதல் நடத்தப்படும் போதும் வெறும் கடிதம் மட்டுமே எழுதும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் மீனவர்கள் நலனை காக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தயங்குவது ஏன்? ஆகவே, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு இலங்கை கடற்படையினரின் அத்து மீறலுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
September 14, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டில் மட்டும் நான்காவது முறையாக பால் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஆவின் நிர்வாகம் மூலம் தயாரிக்கப்படும் பால் பொருட்களான நெய் லிட்டருக்கு 70 ரூபாயும், வெண்ணெய் கிலோவுக்கு 30 ரூபாயும் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வரலாறு காணாத வகையில் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கும் செயலாகும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.