கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் – மாதம் தோறும் ரூ 8.5 கோடி வட்டி கட்டும் சென்னை மாநகராட்சி மொத்த கடனை அடைக்க மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்னென்ன? சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் ரூ 1200 கோடி செலவில் பராமரிக்கும் பணி மற்றும் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, கடந்த 2022 ஆம் ஆண்டு 430 கோடி ரூபாய் செலவில் கழிப்பறைகள் பாராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மேலும் 1200 கோடி ரூபாய்க்கு கழிப்பறைகளை பராமரிக்கும் பணி அதே தனியார் வசமே ஒப்படைப்பது கடும் கண்டனத்திற்குரியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவுத்திட்டம், கால் பந்து திடல் என ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதும், கடும் எதிர்ப்பு கிளம்பிய பின் அதனை திரும்பப் பெறுவதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் சென்னை மாநகராட்சி, தன் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சென்னை மாநகராட்சி வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் 8.5 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தி வரும் நிலையில், மொத்த கடனை அடைக்க எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? தொழில் வரி, சொத்து வரி எனும் பெயரில் மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்தும் எங்கே செல்கிறது? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்வதோடு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய ஒருவர் உயிரிழப்பு – கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டிய காவல்துறையே அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி தங்கராசு என்பவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, இதே கள்ளக்குறிச்சி பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே உறுதிபடுத்துகிறது. கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்பவரை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையை பெற்றுத்தர தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கே, தற்போது மேலும் ஒருவரின் உயிர் பறிபோக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான நபர் ஒருவர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே கள்ளச்சாராய தொழிலில் ஈடுபடுவது தெரியாத அளவிற்கு காவல்துறை செயலிழந்திருக்கிறதா ? அல்லது கள்ளச்சாரய வியாபாரிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறதா ? எந்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து கள்ளச்சாராய வியாபாரிகள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத்தருவதோடு, அவர்களுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டமா? – மீன்பிடி பொருளாதாரத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பு கொள்கையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஏல அறிவிப்பில் தென் தமிழக ஆழ்கடலின் 9990.96 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் இடம்பெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. தமிழ்நாட்டை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வின் மூலம் அப்பகுதிகளில் இருக்கும் அரிய வகை ஆமைகள், பாலூட்டிகள் உள்ளிட்ட முக்கியமான கடல்வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என கடல்சார் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் போது வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் மீன்வளம் பெருமளவில் குறைவதோடு, மீன்பிடி பொருளாதாரத்தையும் மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், மத்திய அரசின் இந்த ஏல அறிவிப்பு மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கடல் வளத்தையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்வதோடு, அதற்காக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா ? தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. சென்னைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அரசுப் பேருந்துகளின் வழித்தட எண், புறப்படும் நேரம், பழுதுகள் மற்றும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாகனக் குறிப்பேடு படிவம் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக தமிழில் இருந்த வாகனக் குறிப்பேடு எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் பணிக்குச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வாகனப் பழுது மற்றும் குறைபாடு விவரங்களை எழுதுவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்திக்கு எதிராக மேலும் ஒரு மொழிப்போரை சந்திக்கக் தயாராக இருப்பதாக வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலேயே தாய்மொழி தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ? அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயன்படுத்தப்படும் வாகனக் குறிப்பேடுகளை கூட தமிழில் வழங்க முடியாத திமுக அரசும் அதன் முதலமைச்சர் அவர்களும், இந்திக்கு எதிராக தமிழ் காக்கும் அறப்போரில் பங்கேற்க பொதுமக்களை அழைப்பது முழுக்க முழுக்க ஏமாற்றும் செயலாகும். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறையைப் பின்பற்றி அரசுப்பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் வழங்கப்படும் வாகன குறிப்பேடு படிவத்தை தமிழில் மட்டுமே வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி, தமிழக அரசியல் வரலாற்றின் தனிப்பெரும் அத்தியாயம், தமிழக மக்களின் துயர் துடைத்த தங்கதாரகை, தமிழக மக்களால் மனதார அம்மா என அழைக்கப்பட்ட வரலாற்றுத் தலைவி நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று. எத்தனை இடர்பாடுகள் குறுக்கிட்டாலும், தடைகள் பல நேரிட்டாலும் அகிலமே வியந்து பாராட்டும் அளவிற்கு எண்ணற்ற நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக குடியிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்கள் பிறந்த இந்நாளில் மக்களை வஞ்சித்து ஏமாற்றும் திமுக அரசையும், சுயநலமிக்க துரோகக் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

திருப்பூரில் கணவர் கண் முன்னே கத்தி முனையில் மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் – குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட முதலமைச்சருக்கு வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது ? திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கோவையில் 17 வயது சிறுமி ஒருவர், தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்களால் கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக வெளியான செய்திகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே மேலும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியிருப்பது தமிழகத்தில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த தமிழகத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் சூழல் தான் நிலவிக் கொண்டிருக்கிறது. அப்பா… அப்பா… என யாரோ எழுதிக் கொடுத்ததை பல நாட்கள் பயிற்சி எடுத்து ஒப்புவிக்கும் நேரத்தில் தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் கவனம் செலுத்தியிருந்தால் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பாதியளவு குறைந்திருக்கும் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது விளம்பர மோகத்திலிருந்து வெளியே வந்து தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதோடு, அதற்கு முதன்மைக் காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகைப் போதைப்பொருட்களை அடியோடு ஒழித்திடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு – பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது ? சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி ஒருவர் செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை முழங்குவது வெட்கக் கேடானது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து இதுவரை வாய் திறக்காத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், தன் துறை சார்ந்த பெண் காவலரிடமே நடைபெற்றிருக்கும் அத்துமீறல் தொடர்பாக வாய் திறப்பாரா ? அல்லது எப்போதும் போல மவுனம் காக்க போகிறாரா ? குற்றச் சம்பவங்களை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் விளைவு தற்போது அத்துறையைச் சார்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதோடு ஒட்டுமொத்த காவல்துறை மீதான மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் இழக்கச் செய்திருக்கிறது. எனவே, இனியாவது தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன ? தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதம் கடந்தும் சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. போட்டித் தேர்வில் மட்டுமல்லாது நியமனத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற பழனிசாமி அரசில் கொண்டுவரப்பட்ட நடைமுறையையே பின்பற்றி தேர்வை நடத்தியதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றும் கலந்தாய்வோ, அதன் மூலம் பணி நியமன ஆணையோ வழங்கப்படாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள சுமார் நான்காயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்துடன் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து துறைகளிலும் நிலவும் லட்சக் கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசும் அதன் அமைச்சர்களும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பது அரசுப்பணியை எதிர்பாத்து காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நான்காயிரம் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்குவதோடு, அரசுத்துறைகளில் நிலவும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.