சமுதாயத்தின் அடித்தளத்தில் உதித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமை சிற்பியாக விளங்கியவரும், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவருமான சட்டமேதை டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று. சுதந்திர போராட்ட வீரராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, சுயமரியாதை சுடரொளியாக, ஆற்றல் மிக்க எழுத்தாளராக, சட்ட மாமேதையாக மக்களுக்காகவே வாழ்ந்த டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றிட அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.

புத்தாண்டு திருநாளாம் விஷு திருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கொண்டாடும் மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விஷு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தங்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிப் பராமரித்து இறைவனை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடும் மலையாள மக்கள் அனைவரின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேறும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும். மலரும் இப்புத்தாண்டு மலையாள மக்கள் அனைவரின் இல்லங்களிலும் இன்பமும், இனிமையும் செழிக்கின்ற ஆண்டாக அமையட்டும் என பிரார்த்தித்து மீண்டும் ஒருமுறை எனது விஷு திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொதுமக்களின் உடல் நலனுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க முடியாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி பொது உயிரி மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இந்த மருத்துவக் கழிவுகள் சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், அத் திட்டத்திற்கான கட்டுமானப் பணியை முழுவீச்சில் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொது உயிரி மருத்துவக் கழிவுகளை எரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மைமிக்க வாயு, மானாமதுரை மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனக்கூறி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்வதோடு, அங்கு நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – இனியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா ? என்பதை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும். பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலவச பேருந்தில் பயணிக்கும் மகளிரை ஓசி பஸ் என விமர்சித்ததோடு, பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஆணவத்துடன் பேசுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் செயல்களை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டும் காணாமல் இருந்ததே, தற்போது மேடை ஏறி பெண்கள் குறித்து இத்தகைய அருவருக்கத்தக்க அளவிற்கு பேசும் துணிச்சலை உருவாக்கியுள்ளது. எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசியிருக்கும் வனத்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்கள், இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்கள் எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.