March 5, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் – குற்றச் சம்பவங்களின் தலைநகராகவும், குற்றவாளிகளின் புகழிடமாகவும் தமிழகத்தை மாற்றிய திமுக வரும் தேர்தலில் வீழ்வது உறுதி. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது அரங்கேறியிருக்கும் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த பொது மக்கள் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.திமுக ஆட்சிப்பொறுப்பேற்ப ஐந்தாண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டிருக்கும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே, தற்போது ஊருக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கான துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. எனவே, மானாமதுரை அருகே கிராமத்தில் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் நேரத்தில், மக்கள் பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு அடுத்த தேர்தலுக்கான விளம்பரப் பணிகளில் மும்முரம் காட்டிவரும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விவசாயிகளின் அனுமதியின்றி நடைபெறும் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கும், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை கிராமத்தில் புதிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் பணிக்கும் கடும் எதிர்ப்பு – பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாதுகாப்பானதாக இருப்பதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட பெருகவாழ்ந்தான் கிராமத்தில் 200க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தைக் கையகப்படுத்தி நடைபெறும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் விளைநிலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்காவுக்கு அப்பகுதி விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அடிக்கல் நாட்டியிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருகவாழ்ந்தான் பகுதியில் முழுமையான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வெப்பநிலை மதிப்பீடு, நிலத்தடி நீர் ஆய்வு மற்றும் கிராம சபை ஒப்புதல் என எந்தவித முறையான அனுமதியுமின்றி இதுபோன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விளை நிலங்களோடு விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கும் இந்த சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமைதியான முறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அனுமதி மறுத்திருப்பது சர்வதிகாரப் போக்கின் உச்சபட்சமாகும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறியும், முறையான அனுமதி இன்றியும் அவசரகதியில் நடைபெறும் இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டமும், சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் நடவடிக்கையும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பசுமைப் பரப்பு வெகுவாக குறையும் என்பதோடு உணவு உற்பத்தியையும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நடைபெற்று வரும் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தையும், ஆலங்கோட்டை கிராமத்தில் அடிக்கல் நாட்டியிருக்கும் சாயப்பட்டறைகளுடன் கூடிய ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்திடுவதோடு, வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலக நுழைவாயிலில் தமிழில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் – இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் அதிகாரிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மண்டல ரயில்வே மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் ”கர்தவ்ய த்வார்” என இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாள்தோறும் தமிழக மக்களும், ஏராளமான ரயில் பயணிகளும் வந்து செல்லும் ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதி வைக்க வேண்டிய பெயர்ப் பலகையை இந்தியில் மட்டுமே எழுதி வைத்திருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் திருச்சி ரயில்வே மண்டல மேலாளர் அலுவலகத்தின் நுழைவாயிலில் தமிழில் பெயர் வைக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் ரயில்வே துறையையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 2025 ஆம் ஆண்டிற்கான ”மாயா கோனே” சமூக ஊடகர் விருதுக்குத் தேர்வாகியிருக்கும் புதிய தலைமுறை செய்தி நிறுவனத்தின் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. சமஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் மற்றும் சமூக மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த கருவியாக இதழியலைத் துணிச்சலுடன் கையாண்டதன் அடிப்படையில் இவ்விருதுக்குத் தேர்வாகியிருக்கும் திரு. சமஸ் அவர்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆதிக்க வர்க்கத்திற்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்தவரும், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கத் தொடர்ந்து பாடுபட்டவருமான அன்பின் திருவுருவம் அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த திருநாள் இன்று. “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றார்” எனப் போதித்து மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் சம உரிமை கொண்டவர்கள் என்பதை எடுத்துரைத்த அய்யா வைகுண்டர் அவர்கள் அவதரித்த இந்நாளில் அவர் காட்டிய வழியில் பயணிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.
March 4, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வசந்தகாலத்தை வரவேற்கும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வேற்றுமையில் ஒற்றுமையோடு, சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் வளத்தையும், வசந்தத்தையும் வழங்கும் நாளாக அமையவேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
March 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர் கைது – வானில் பறக்கும் விமானத்திலும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது தான் திமுகவின் சாதனைகளின் நீட்சி… விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டரை வயது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பறக்கும் விமானத்தில் அரங்கேறியிருக்கும் மற்றுமொரு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் திமுகவினரை பார்த்தாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என மேடைக்கு மேடை மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர் தான் என்பது தெரியுமா? தெரியாதது போல நடிக்கிறாரா? எனவே, பெண்களை போகப் பொருட்களாக மட்டுமே பார்க்கும் திமுகவினரை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஒடுக்கத் தவறினால், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் ஒன்றிணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சம்பட்டி அடி கொடுப்பார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் எடுபடாது – திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து தமிழக மக்கள் பின்வாங்க மாட்டார்கள்.தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் மற்றும் உதவித் தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 322வது வாக்குறுதியான முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை ஆட்சி நிறைவடையும் தறுவாயிலும் நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, தற்போது சிறப்பு நிதி எனும் பெயரில் 2000 ரூபாய் வழங்கியிருப்பது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும். அண்டை மாநிலங்களைப் போல மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறைக்கு உள்ளாக்கிய திமுக அரசு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், மக்கள் நலனுக்கான நிரந்தர தீர்வை எட்டுவதை விட்டுவிட்டு அவர்களை வெறும் தேர்தல் நேர வாக்குவங்கியாக மட்டுமே பார்ப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே, கடந்த ஐந்தாண்டுக் கால இருண்ட ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துவிட்டு தற்போது திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் இதுபோன்ற தேர்தல்கால சித்து விளையாட்டுக்களை நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதோடு, வரும் தேர்தலில் திமுவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து துளியளவும் பின்வாங்க மாட்டார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
March 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு – பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே போதையிலிருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, அவ்வழியே பயணிப்போர் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இதே திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு பீடத்தில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது. எனவே, இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 27, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த திமுக நிர்வாகி கைது – பச்சிளம் குழந்தைக்குக் கூட பாதுகாப்பில்லாத திமுக அரசை வரும் தேர்தலில் வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வுகிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே இரண்டரை வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்திருப்பதாக திமுகவின் இளைஞரணி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பச்சிளம் குழந்தைகள், கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் வசிக்கும் வயதான முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழகத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் எனப் பெருமை பேசுவதும், பல கோடி ரூபாய் செலவில் விளம்பரம் செய்வதும் வெட்கக் கேடானது. கஞ்சா விற்பனையில் தொடங்கி கள்ளச்சாராயம் காய்ச்சுவது உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்த திமுக நிர்வாகிகளைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே, தற்போது அரங்கேறியிருக்கும் இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் எனப் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பச்சிளம் குழந்தை என்று பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குரூர மனம் படைத்த திமுக நிர்வாகிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இந்நேரத்தில், தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் நிம்மதியாக வாழ, வரும் தேர்தலில் திமுகவை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவது தான் ஒரே தீர்வாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.