தாய்ப்பாலுக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தவித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால்பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைப்பதே இப்போதைய அவசரத்தேவையாகும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி, உடனடித் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதனை தொடர்ந்து மீறி வருவது இரு மாநில உறவுகளுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல. மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது மணல் கொள்ளையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை தி.மு.க அரசு கண்டும் காணாமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ. கொல்லப்பட்டு ஒரு மாத காலம் ஆன நிலையிலும் கூட, இத்தகைய தாக்குதலில் ஈடுபடும் ஆளும் கட்சியினர் மீது வெறுமனே கைது நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே தீர்வாகாது. ஆளுங்கட்சியினர் என்ற அடையாளத்துடன் மணல் கடத்தலில் ஈடுபடுவதையும், தடுப்போர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்துவதையும் கட்சித் தலைவர் என்ற முறையில் திரு.ஸ்டாலின் கண்டித்து, இனிவரும் காலங்களில் இத்தகயை சம்பவங்கள் நடைபெறாதவாறு இருக்க அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் உள்ளிட்ட இயற்கை வளங்ககளை கடத்துவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வ பிரபு கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில்,‌ மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த செல்வ பிரபு இந்தியாவிற்காக சாதனை படைத்திருப்பதை பெருமிதத்துடன் பாராட்டுகின்றேன். இந்த சாதனையின் வாயிலாக தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் 2023 Asian Athletics Championships போட்டிக்கு தகுதி பெற்றுள்ள செல்வ பிரபு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை பெறவும் வாழ்த்துகின்றேன்.

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.